குடும்பத் தகராறை காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்குடும்பத் தகராறைக் காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தக் கூடாது என்று மின்வாரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

         சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணியாற்றுபவர் ஏ.வேலுச்சாமி. இவருக்கு மனைவியுடன் குடும்பத் தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் விவாகரத்து கோரி, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வேலுச்சாமி மனுதாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்களது திருமணம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வருவதற்கு முன்பே வேலுச்சாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதாக ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டிடம் அவர் மனைவி தனிப்பட்ட புகார் கொடுத்தார். இதன் காரணமாக 2014-15-ம் ஆண்டுக்கான உட்தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் வேலுச்சாமி பெயர் இடம்பெறவில்லை. மனைவியின் தனிப்பட்ட புகாரால் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். பின்னர் பணி இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர் பணியில் சேர்ந்தார்.
அதன் பிறகு, அவருக்கு ஆண்டு சம்பள உயர்வும் தரப்படவில்லை. இச்சூழ்நிலையில், உட்தணிக்கை அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த 10-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை உட்தணிக்கை அதிகாரியிடம் வேலுச்சாமி மனு கொடுத்தார். அதன் மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து பதவி உயர்வு பட்டியலில் தனது பெயரை சேர்க்கவும், 1-4-2012 முதல் ஆண்டு சம்பள உயர்வு வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுச்சாமி மனுதாக்கல் செய்தார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்தால் அதைக் காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தி வைக்க முடியாது. வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார் என்ற தனிப்பட்ட புகார் மீதான விசாரணை நிலுவை யில் இருப்பதைச் சுட்டிக் காட்டியும் அவரது பதவி உயர்வை நிறுத்த முடியாது. பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மனுதாரர் பணியில் சேர்ந்துவிட்டதால், இயல்பாகவே சம்பள உயர்வைப் பெற தகுதியுடையவராகிறார். எனவே, அவருக்கு ஆண்டு சம்பள உயர்வு தர முடியாது என்று கூறுவதற்கு காரணம் எதுவும் இல்லை. ஒருவர் வழக்கொன் றில் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே அவரது சம்பள உயர்வை நிறுத்திவைக்க முடியும்.சம்பள உயர்வு பெற மனுதாரருக்கு உரிமை உண்டு. 8 வாரத்துக்குள் மனுதாரருக்கு ஆண்டு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click