110 நகரங்களில் வசிப்பவர்கள் மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் புதிய வசதி அறிமுகம்

சென்னை,
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 110 நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மின்கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தலாம் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
புதிய திட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 9 பகிர்மான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மண்டலங்களில் வசிக்கும் மின்நுகர்வோர்கள் கடந்த 2008–ம் ஆண்டிலிருந்து மண்டலத்திலுள்ள எந்த பிரிவு அலுவலகத்திலும் தங்களுக்குரிய மின்கட்டணத்தை செலுத்தும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மின்தொடர் மூலமாக ஏற்படும் தொழில் நுட்ப மற்றும் வணிக விரயங்களை கண்டறிந்து தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ‘‘மறுசீரமைக்கப்பட்ட முடுக்கி விடப்பட்ட மின்வளர்ச்சி மற்றும் சீர்திருத்த திட்டம்’’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
110 நகரங்களில் அமல்
தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில் முதல் கட்டமாக இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நுகர்வோர் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, நவீன முறையிலும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மின்கட்டணம் செலுத்தும் சேவைகளும் அடங்கும்.
புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் 110 நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வசிக்கும் மண்டலம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள 110 நகரங்களிலும் தங்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியும்.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வராத நகரங்களில் வசிப்பவர்கள் மற்ற பிரிவு அலுவலகங்களில் தங்களது மின்கட்டணத்தை செலுத்த இயலாது. அவர்கள் தங்கள் மண்டலத்தின் கீழ் புதிய திட்டம் அமல்படுத்தாத பிரிவு அலுவலகங்களில் மின்கட்டணத்தை செலுத்தலாம்.
 இதற்காக தற்போது மண்டலம் முழுவதும் மின்கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இணையதளம், வங்கிகள்
பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து இந்த புதிய திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு எந்த பிரிவு அலுவலகத்திலும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள இணையதளம், வங்கிகள் மற்றும் தபால்நிலையங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் அனைத்து மின்நுகர்வோர்களுக்கான மின்கட்டணங்களை செலுத்தும் வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click